நாளையுடன் மூடப்படும் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலை- ஊழியர்களுக்கு இன்று இழப்பீடு
சென்னை: நோக்கியா தொழிற்சாலையைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையும் நாளையுடன் மூடப்படுகின்றது. அதனுடைய ஊழியர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கும் பணி நடைபெற உள்ளது.
தைவானை சேர்ந்த செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் "பாக்ஸ்கான்". இதன் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது.
அண்மையில் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து "பாக்ஸ்கான்" தொழிற்சாலையும் நாளையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும், பயிற்சி தொழிலாளர்களாகவும் 8000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இதில் ஏற்கனவே, 6400 பணியாளர்கள் வேலையை இழந்துள்ள நிலையில் மீதமுள்ள 1306 தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஸ்டாண்டர்ட் சம்பளம், லம்சம் தொகை ரூபாய் 50,000, பணி மூப்புத்தொகை, 3 மாத நோட்டீஸ் பீரியட் பே, 2014 ஆம் ஆண்டிற்கான சட்டப்படியான போனஸ் தொகை ரூபாய் 8,300 ஆகியவற்றை வழங்க தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனால், இன்று தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தினுள் உள்ள மனிதவள மேலாளரை நேரில் அணுகி இழப்பீட்டுதொகை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இழப்பீடு பெற தவறும் பட்சத்தில் சட்டப்படியான இழப்பீட்டு தொகை மட்டும் நாளைக்குள் அவரவர் வங்கிக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 8,000 தொழிலாளார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தொழிற்சாலை மூடுவதை தடுத்து நிறுத்த இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.