இம்மாத இறுதிக்குள் சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் நிறுவனம் திறப்பு.. அமைச்சர் சம்பத் தகவல்
சென்னை: மூடப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலை சென்னையில் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
தைவானை சேர்ந்த செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் "பாக்ஸ்கான்". இதன் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்தது.
இந்த தொழிற்சாலை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும், பயிற்சி தொழிலாளர்களாகவும் 8000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
செட்டில்மென்ட்
இதில் முதலிலேயே, 6400 பணியாளர்கள் வேலையை இழந்த நிலையில் எஞ்சியிருந்த சுமார் 1500 தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை நிறுவனம் வழங்கியது.
நோக்கியாவை தொடர்ந்து
அந்த ஆலை மூடப்படும் சில காலங்கள் முன்புதான், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் ஆலையும் மூடப்பட்டிருந்தது. இதனால் தமிழக தொழில்துறையினர், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாக்ஸ்கான் மீண்டும் வந்தது
இந்நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் இம்மாத தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து சம்பத் கூறுகையில், தமிழக அரசு அதிகாரிகள் குழு சமீபத்தில் தைவான் சென்று பாக்ஸ்கான் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதால் மீண்டும் ஆலை திறக்கப்பட உள்ளது.
இம்மாத இறுதிக்குள்
இம்மாதம் இறுதிக்குள் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் திறக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலை இருந்த பகுதியில் பாக்ஸ்கான் நிறுவனம் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.