போலி வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரம்- புரோக்கர் அதிரடி கைது
போலி வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புரோக்கர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாவட்டத்தில் போலி வீட்டு மனை பட்டா வழங்கி மோசடி செய்த புரோக்கரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
திருவேங்கடம், குருவிகுளம் அருகே செட்டிகுளம் கீழத் தெருவைச் சேர்ந்த அய்யனார் மனைவி சமாதானம் அம்மாள். இவர் கடந்த 2015ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த புரோக்கர் கனகராஜிடம் தனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் ரூ.25 ஆயிரம் தந்தால் இலவச வீட்டுமனைப்பட்டா வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சமாதானம் அம்மாள் உட்பட 15 பேர் கனகராஜை அணுகி தலா ரூ.25 ஆயிரம் என 3 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
கனகராஜூம் ஒரு மாதத்தில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இலவச வீட்டுமனை பெற்ற இடத்தில் வீடு கட்ட முடிவு செய்த சமாதானம் அம்மாள் கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.
இதில் இலவச வீட்டு மனைப்பட்டா போலியானது என்பது தெரியவந்தது. புரோக்கர் கனகராஜ் வாங்கித் தந்த 15 இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் போலி என்பது தெரிய வரவே, குருவிகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்தனர். போலி பட்டா தயாரிப்புக்கு எவேறு யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று வேறு இடத்தில் எங்காவது ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.