தாத்தா, பாட்டிகளுக்கான இலவச பஸ் பாஸ்... இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம்!
சென்னை: இலவச பஸ் பாஸ் வசதியை மூத்த குடிமக்கள் இரவு நேரத்திலும் பயன்படுத்தலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் சட்டசபையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இத்திட்டம் வரும் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
இந்நிலையில், இந்த சலுகையை மூத்த குடிமக்கள் எப்படிப் பெறுவது என்பது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி இந்தியாவிலேயே முதன் முறையாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் 24-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயணம் செய்ய மாநகர போக்குவரத்துக் கழக வலைதள முகவரியில் (www.mtcbus.org)-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மாநகர போக்குவரத்து கழக பஸ்நிலையங்கள் மற்றும் பணிமனைகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பஸ் நிலையங்கள் மற்றும் பணிமனைகள் உள்பட 42 இடங்களில் விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று அளித்து கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் மாதம் ஒன்றுக்கு தலா 10 டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 20-ந்தேதியன்று தொடங்கி வைத்தார்.
பேருந்தில் பயணம் செய்யும் போது புகைப்படத்துடன் கூடிய அசல் பயணஅடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து அசல் கட்டணமில்லா பயண டோக்கனை பேருந்து நடத்துநரிடம் அளித்து அதற்குரிய கட்டணமில்லா பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும்.
பரிசோதகர்கள் பரிசோதனையின்போது பயண அடையாள அட்டை மற்றும் கட்டணமில்லா பயணச்சீட்டு ஆகியவற்றை கேட்கும்போது காண்பிக்க வேண்டும்.
கட்டணமில்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்திற்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்து விட்டால் அந்த டோக்கன்கள் காலவதியானதாக கருதப்படும்.
கட்டணமில்லா பயண அட்டை மற்றும் டோக்கன்கள் குறிப்பிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் மாநகர பேருந்து பணிமனைகள் உள்பட 42 இடங்களில் அனைத்து நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் விண்ணப்பதாரர்களுக்கு நேரில் வழங்கப்படும்.
விண்ணப்பம் அளிக்கும்போது வயது மற்றும் இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேசன் கார்டு அல்லது பள்ளி சான்றிதழ் இதுபோன்ற சான்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் 5 செ.மீ. X 4 செ.மீ. அளவிலான (பாஸ்போர்ட் அளவு) இரண்டு புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதியை சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேர பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளிலும் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) பயணம் செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.