இலவச பழுது பார்க்கும் முகாமில் சீரமைக்கப்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த 40,000 வாகனங்கள்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்காக தமிழக அரசு ஏற்பாடு செய்த இலவச பழுது பார்க்கும் முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த முகாம்களில் மொத்தம் 40,000 வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் கடும் பாதிப்படைந்தன. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பெரும்பாலான வாகனங்களின் எஞ்சினில் தண்ணீர் புகுந்து பழுதாகின. இதுதவிர குடியிருப்பு வளாகங்களுக்குள் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளையும் மழை நீர் பதம் பார்த்தது.
இதனைத் தொடர்ந்து பழுதான இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்க 200 இடங்களில் சிறப்பு முகாம்கள் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை பழுது நீக்க, இலவச முகாம் நடத்தப்படும் இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட வாகனங்களின் டீலர் பெயர், முகவரி, மொபைல் போன்ற விவரங்கள் www.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டன.
கடந்த 12-ந் தேதி இலவச பழுது பார்க்கும் முகாம்கள் தொடங்கியது. சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், சூளைமேடு உள்பட 106 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்தன.
கடைசிநாளான நேற்று ஏராளமான வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டன. உள்ளூர் மெக்கானிக்குகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அழைத்து வரப்பட்ட மெக்கானிக்குகள் வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் பழுது பார்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.