நெல்லையில் நவம்பர் 10 முதல் குரூப் 4 க்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
நெல்லை: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 நிலைகளில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், நில அளவையார், வரைவாளர் பணியிடங்களுக்கு தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடக்கிறது.
இந்த தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அனுபவமுள்ள பயிற்றுனர்களால் வரும் நவ 10 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நேரிலோ, அஞ்சல் வழியிலோ உடனே தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தில் இனம், பிறந்த தேதி, கல்வி தகுதி, முழுமையான அஞ்சல் முகவரி, கைபேசி எண், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட பதிவு எண், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான அடையாள அட்டையின் நகல் ஆகியவை இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற பல்வேறு இடங்களிலும் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.