திருச்சியில் பரபரப்பு... கடத்த முயன்ற 10,000 இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்!
திருச்சி: திருச்சியில் இருந்து ஈரோடுக்கு கடத்த முயன்ற, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி கீழரண் சாலையில், திருச்சியில் இருந்து ஈரோடுக்கு தினந்தோறும் செல்லும் திருச்சி-ஈரோடு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் (டி.இ.டி) செயல்படுகிறது.
அதில், தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் கடத்தப்படுவதாக, கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் கணேசசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, லாரி செட்டில், 86 பண்டல்களில் இருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, இலவச வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, லாரி உரிமையாளரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் மிகப்பெரிய அளவில் நடந்த, இலவச வேட்டி, சேலை கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.