இன்றுமுதல் விலையில்லா வேட்டி சேலை.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மக்களின் வாழ்வாதார தொழிலாக நெசவுத் தொழில் விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்குவதற்காகவும், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் கடந்த 1983-ம் ஆண்டு வேட்டி- சேலை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பெண்களின் விருப்பத்திற்கேற்ப சேலைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாற்றம் மற்றும் தரமான சேலைகளை வழங்கும் வகையில் 60-ம் எண் பருத்தி சாயமிட்ட நூலினை பாவாகவும், 80-க்கு 34 பருமன் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை ஊடையாகவும், 150 பருமன் காட்லுக் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை கரையாகவும் கொண்ட பாலிகாட் சேலைகளை வழங்க கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஆணையிடப்பட்டது.
நடப்பாண்டு பொங்கல் 2015-ம் ஆண்டுக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 50 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்த திட்டத்திற்கு தேவையான விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வருவாய் துறை வழங்கிய தேவைப்பட்டியலின்படி அனைத்து மாவட்டங்களிலுள்ள தாலுகா அலுவலகங்களுக்கு கடந்த 5-ந் தேதி முதல் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் 2015-ம் திருநாளையொட்டி, விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டி-சேலை விநியோகம் இன்று முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்களால் வழங்கி தொடங்கிவைக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.