பெண்கள் போராட்டத்தை ஒடுக்க ஆண்களை 'சுதி ஏற்றும்' அரசு.. டாஸ்மாக்கில் இலவச மதுபானம் வினியோகம்!
திருப்பூரில் புதியதாகத் திறந்த டாஸ்மாக் கடையில் இலவசமாக மது பாட்டில்கள் வழங்கப்பட்டதால் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
திருப்பூர்: திருப்பூரில் புதிதாக திறந்த மதுக்கடையில் குடிமகன்களை கவர இலவசமாக மது விநியோகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புது மதுக்கடைகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பெண்கள் முன்னின்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
இந்த நிலையில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான திருப்பூரில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தினமும் நடந்து வருகிறது. சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பூர் கஞ்சம்பாளையம் ராதா நகரில், நேற்று திடீரென டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. குடிமகன்களுக்கு இந்த கடை திறக்கப்பட்டது தெரியாததால் மதியம் வரை கூட்டம் வரவில்லை.
முதலில் வந்தவர்களுக்கு இலவசம்
இதனால், முதலில் கடைக்கு வந்த குடிமகன்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை டாஸ்மாக் கடை ஊழியர்கள் கொடுத்தனர். இந்த தகவல் காட்டூத்தீபோல் பரவியதால் அடுத்த சில மணி நேரத்தில் இந்த கடைக்கு ஏராளமான குடிகன்கள் வந்து குவிந்தனர். கூட்டம் அதிகமானதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மதுகொடுத்துவிட்டு பின்னர் நிறுத்திவிட்டனர்.
நீண்ட வரிசையில் நின்றனர்
ஆனாலும் புதிய மதுக்கடை திறந்ததால் மகிழ்ச்சி அடைந்த குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
பொதுமக்கள் சாலைமறியல்
டாஸ்மாக் கடைதிறப்பு குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர்.
போலீஸ் பேச்சுவார்த்தை
போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் புதிதாக திறந்த இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்றனர்.
2 நாளில் முடிவு
அதற்கு போலீசார் இன்னும் 2 நாட்களில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும் அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்றனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.