கொத்துக் கொத்தாக செத்து விழும் ஜெ. வழங்கிய இலவச ஆடுகள்!
நெல்லை: நெல்லை அருகே அரசு வழங்கிய இலவச ஆடுகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லையை அடுத்த மானூர் அருகேயுள்ள ஊக்கிரன்கோட்டை ஊராட்சியில் அரசு சார்பில இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு 93 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆலங்குளம் ரெட்டியார்பட்டி சந்தையில் ஆடுகள் வாங்கப்பட்டு கடந்த வாரம் ஒரு பயனாளிக்கு ஒரு கிடாயும், 3 ஆடுகளும் வழங்கப்பட்டன.
ஆனால் இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இறந்து வருகின்றன. மேலும் சில ஆடுகள் இறக்கும் தருவாயில் உள்ளன. இதனால் இலவச ஆடுகளை பெற்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் முதன் முறையாக உக்கிரன்கோட்டை பஞ்சாயத்தில் இலவச ஆடுகள் கேட்டு விண்ணப்பித்தோம். பரீசிலனைக்கு பிறகு 93 பேர் இந்த திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டோம்.
73 பேருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏஜென்டுகளை நியமித்து அவர்கள் மூலம் ஆடுகளை வாங்கி கொடுத்தனர். எஞ்சிய 2000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து ஆடுகளை வாங்கி கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆடுகளை நாங்கள் வீட்டுக்கு வாங்கி வந்தது முதல் அவை சரிவர இரை எடுக்காமல் இருந்து வந்தது. நாட்கள் செல்ல செல்ல அவை ஓவ்வொன்றாக இறந்து வருகின்றன. இதுவரை 20 ஆடுகள் இறந்து விட்டன.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். இறந்த ஆடுகளை புகைப்படம் எடுத்து விட்டு புதைத்து விடுமாறு அவர்கள் கூறுகின்றனர். பலியான ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இலவச ஆடுகள் இறந்து வருவது கிராமத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.