சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம்
சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயிலில் இதுவரை 4 லட்சம் பேர் இலவச பயணம் செய்துள்ளனர்.
சென்னை : சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி இலவச பயணம் அறிவித்ததில், இதுவரை 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புதிதாக இரண்டு வழித்தடங்கள் திறந்து வைக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் நேரு பூங்கா வரையிலும், சின்னமலை முதல் டிஎம்எஸ் வரையிலும் புதிய மெட்ரோ வழித்தடங்களைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி துவக்கி வைத்தார்.
திறப்பு விழாவையொட்டியும், ரயில் சேவை குறித்த விழிப்பு உணர்வுக்காகவும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படி, சனிக்கிழமை மட்டும் இந்த வழித்தடங்களில் 1,20,500 பேர் பயணித்துள்ளனர். நேற்று விடுமுறை நாளில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், 1,84,000 பேர்பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை வரை இலவச ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்தையொட்டி, சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதால் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.