சபாஷ்.. அழும் பிள்ளைகளுக்கு பால் கொடுத்து பசியாற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கு பால், சுடுநீர் வழங்கப்படுகிறது.
மதுரை: சத்தமே இல்லாமல் ஒரு சாதனையும், விளம்பரமே இல்லாமல் திட்டம் ஒன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்து வருகிறது.
பொதுவாக, பெரிய பெரிய கோயில்கள் என்றாலே தரிசனத்திற்கு நீண்ட நேரம் பிடிக்கும். பக்தர்கள் கியூவில் நின்று தரிசனம் செய்வர். அப்போது குழந்தை, குட்டிகளை வைத்துக் கொண்டுதான் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அதுவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்றால் சொல்லவே வேண்டாம். இங்கு வடமாநில, மற்றும் வெளிநாட்டு பயணிகள் என ஆயிரக்கணக்கில் தினந்தோறும் திரண்டு வருவர்.
இலவச பால், சுடுநீர்
வரிசையே என்றாலும் கூட்டம் அலைமோதும் நேரத்தில் குழந்தைகள் பசித்து அழுதால் சமாளிப்பது கடினமாகவே இருந்து வருகிறது. அப்படி அழும்போது, மற்ற பக்தர்களுக்கும் இது இடையூறாகவே தென்பட்டு வருகிறது. தரிசனம் பார்க்க எப்படியோ 2 மணி நேரமாவது ஆகிவிடுகிறது. இதனால் அழும் குழந்தைகளின் பசியை போக்க மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் இலவச பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்க சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுத்தது.
20 லிட்டர் பால்
அதன்படி அம்மனின் சன்னதியில் அவற்றினை குழந்தைகளுக்கு வழங்கவும் தொடங்கிவிட்டது. இதற்கென 2 ஊழியர்களையும் அந்த பணிக்கு அமர்த்தியுள்ளதுடன், சிறப்பாக தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக தினமும் 20 லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. அவை தீர்ந்துவிட்டால் கூடுதலாக பால் வழங்க தயாராக உள்ளதாகவும் கோயில்நிர்வாகம் அறிவித்துள்ளது.
பால்புகட்டும் அறை
அத்துடன் பெரிய கேன் ஒன்றில் எந்நேரமும் சுடுநீர் குழந்தைகளுக்காகவே வைக்கப்பட்டுள்ளது. 3 வயதுடைய குழந்தைகளுக்கு இந்த பாலும், சுடுநீரும் வழங்கப்படுகிறது. இவை தவிர குழந்தைகளுக்கு பால் புகட்ட தாய்மார்களுக்கு ஒரு தனி அறை கூட ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடும் சிறப்புக்கள்
இந்த திட்டம் பெண்கள், பொதுமக்கள், பக்தர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதனால் தைரியமாகவும், நம்பிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் பெண்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மேலும் பல சிறப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றன!