ஓட்டை உடைசல் ஈயம் பித்தாளை இலவச மிக்ஸி, கிரைண்டரால் பரபரப்பு!
நெல்லை: பாவூர்சத்திரம் அருகே தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் பொதுமக்களுக்கு உடைந்த நிலையில் வழங்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சென்னெல்புதுக்குளம் மற்றும் அம்பேத்கார் காலனி பகுதியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. இவைகள் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
இவற்றை பெற்ற பொதுமக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது பெரும்பாலான மிக்சிகளில் பிளேடு உள்ளிட்ட உதிரி பாகங்கள் கழன்றும், கிரைண்டரில் அரவை கல், மின் விசிறியில் இறக்கைகளும் உடைந்து காணப்பட்டது. மேலும் சிலர் மிக்சி, கிரைண்டரை இயக்கி பார்த்தபோது அவை செயல்படாமல் நின்றுவிட்டது.
இதனால் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதை மாற்றி தருமாறு அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர். பழுதானதற்கு மாற்றாக வேறு வழங்க ஒரு மாத காலம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் தங்களது நிலையை நொந்து தலையில் அடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.
வேறு சிலர் பழுதானவற்றை எடுத்து கொண்டு சர்வீஸ் சென்டரை நோக்கி நடையை கட்டினர். இந்த தகவல் கசிந்ததும் பொதுமக்கள் பலர் இலவச பொருட்களை வாங்காமல் திரும்பி சென்றனர். அரசின் இலவச பொருட்கள் பழுதான நிலையில் வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.