ரூ. 500ஐ நீட்டும் ஓட்டுநர்கள்... சில்லறை இல்லை... இலவசமாக சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்கள்
பெரும்பாலான வாகன ஓட்டிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக தருவதால், போதிய சில்லறை இல்லாமல் சுங்க சாவடிகள் திண்டாடி வருகின்றன.
சென்னை: போதிய சில்லறை இல்லாததால், ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை நீட்டும் வாகன ஓட்டிகளை, கட்டணம் பெறாமலேயே சுங்கச்சாவடியைக் கடக்க அனுமதிக்கிறார்களாம் ஊழியர்கள்.
நேற்றிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏடிஎம்களில் நூறு ரூபாய் நோட்டுகளை எடுக்க மக்கள் குவிந்தனர். ஆனால், எல்லாருக்கும் அது சாத்தியமாகவில்லை.
இதனால் இன்று வங்கிகளும், ஏடிஎம் மையங்களும் செயல்படாத நிலையில், கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பலர் ஆளாகியுள்ளனர்.
சிரமம்...
ஆனால் பல இடங்களில் இந்த நோட்டுகளை ஏற்றுக் கொள்ள வியாபாரிகள் மறுக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சுங்கச் சாவடிகளில்...
அந்தவகையில் சுங்கச் சாவடிகளிலும் பலர் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய சில்லறை தர அங்குள்ள ஊழியர்களிடம் தேவையான பணம் இல்லை.
சிறப்பு அனுமதி...
இதனால், பல சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. சில இடங்களில் சிறப்பு அனுமதியுடன் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
வாகன நெரிசல்...
மேலும் செங்கல்பட்டு, வேலூர் உட்பட பல சுங்கச்சாவடிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.