சென்னை சுடுகாட்டில் இலவச வைஃபை.. இறுதிச் சடங்கை இனி நேரலையாக பார்க்கலாம் !
சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானத்தில் இலவச வைஃபை ஏற்படுத்தப்பட்டுள்ளது
சென்னை: சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானத்தில் இலவச வைஃபை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு வர முடியாதவர்களுக்கு இணையத்தின் மூலம் நேரலையில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 38 மயானங்கள் உள்ளன. இங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு ரூ. 250, தகனம் செய்வதற்கு ரூ. 650 (விறகு, வறட்டிக்கு தனி கட்டணம்), மின்சார மயானத்தில் தகனம் செய்ய ரூ. 250 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த கட்டணம் வசூலிப்பதில் மயான பொறுப்பாளர்கள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அதிக கட்டணம் கேட்டு இறந்தவர்களின் உறவினர்களை நிர்ப்பந்திப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி மயானங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் இலவசம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள மின் மயானங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தது சென்னை மாநகராட்சி. இதன் அடிப்படையில் சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானம் ஐ.சி.ஓ.டபுள்யூ என்ற என்ஜிஓ-விடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திடம் ஒப்படைத்த பின்னர் பல்வேறு அடிப்படை வசதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதன் முறையாக சுடுகாட்டில் வைஃபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது அந்த நிறுவனம். அதன்படி வரும் 15-ம் தேதி முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து ஐ.சி.ஓ.டபுள்யூ நிர்வாகம் கூறுகையில், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு வர முடியாதவர்களுக்கு இணையத்தின் மூலம் நேரலையில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.