குமரியில் டோக்கன் மூலம் பரிசுகள் சப்ளை, கவனிக்குமா தேர்தல் ஆணையம்?: பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தலையொட்டி டோக்கன் மூலம் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவரும், குமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது. இதனால் தமிழகம் மட்டும் அல்லாமல் தேசிய அளவில் பாஜக அமோக வெற்றி பெறும். கன்னியாகுமரி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றால் தானே இட ஒதுக்கீடு பற்றி பேச முடியும். அப்படி இருக்கையில் அவர் தேவையில்லாமல் இடஒதுக்கீடு பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் டோக்கன் மூலம் பரிசுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறதாம். இதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுபானங்களும் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுத்தால் தான் தேர்தலை அமைதியான முறையில் நடத்த முடியும்.
மோடி திறமையற்றவர் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக திறமையான முறையில் நிர்வாகம் செய்து வருகிறார். அதற்காக அவர் பாராட்டும் பெற்றுள்ளார். பாஜகவின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் வெவ்வேறு வண்ணத்தில் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பெயரில் இரண்டு வேட்பாளர்கள் இருந்தால் மக்கள் குழம்பிவிடுவார்கள் என்றார்.