இலவசங்கள் கொடுத்து தமிழ்நாட்டு நிதி நிலைமையை சீர்குலைத்த அரசுகள்!
இலவசங்களாக அள்ளிக் கொடுத்தே தமிழ்நாட்டு நிதியை அரசுகள் சீர்குலைத்துவிட்டன என்கின்றன புள்ளி விவரங்கள்.
சென்னை : இலவசங்களாக அள்ளிக் கொடுத்து தமிழ்நாட்டு நிதி ஆதாரத்தை அரசுகள் அதள பாதாளத்தில் தள்ளிவிட்டன என்பது ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளிக் கொடுத்ததன் பயனாக அரசு தற்போது ஓட்டாண்டியாகி நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கிறது. இதற்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது தான் ரிசர்வ் வங்கியின் அறிக்கை.
தமிழக அரசு சமூக நலனை சீரழிப்பதற்காகவே அதாவது இலவசங்களுக்காக ரூ.78 ஆயிரத்து 100 கோடியை செலவிட்டுள்ளது, இதனால் ரூ.2.56 லட்சம் கோடி கடன் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
206ல் தொடங்கிய கலாச்சாரம்
2006ம் ஆண்டு முதல் 2011 வரையிலும் அதற்கு பின்னர் 2016 தேர்தலிலும் கூட அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வாரி இரைத்தன. கலர், டிவி, மிக்சி, கேஸ் அடுப்பில் ஆரம்பித்த இலவச மோகம் தாலிக்கு தங்கம், ஆடு, மாடு, சைக்கிள் என்று அறிவித்து மக்களை சோம்பேறியாக்கிவிட்டன.
வளர்ச்சிக்கு சாபக்கேடு
நாட்டின் வளர்ச்சிக்கு சாபக்கேடாக வந்த இலவச கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது திமுக தான் என்று விளாசுகிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. திமுக தலைவர் கருணாநிதி முதன் முதலில் கலர் டிவி வழங்குவதாக அறிவிக்க, அதே ஃபார்முலாவை பின்பற்றி 2011 தேர்தலில் இலவசங்களை தள்ளி விட்டு அரியாசணை ஏறினார் ஜெயலலிதா. உற்பத்தித் திறன் அதிகம் உள்ள நம் மக்களின் உழைப்பை இலவசங்கள் சோம்பேறிகளாக்கியுள்ளதாக" கூறுகிறார் குருமூர்த்தி.
கோட்டை விட்ட அரசு
தங்களது இலவச அறிவிப்புகளுக்கான செலவுகள் பிற வளர்ச்சி செயல்பாடுகளை பாதிக்காது என்று கூறுகின்றன அரசுகள். ஆனால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீடு கடும் பாதிப்புக்குள்ளாகிறது.
சரிந்த நிதிக்கொள்கை
நீலிக்கண்ணீர் காரணம் சொல்லும் அரசின் செலவுக் கணக்கெல்லாம் ரிசர்வ் வங்கி முன் எடுபடாது. இலவசங்களுக்கான செலவுகளாலேயே மாநில அரசின் நிதிக் கொள்கை சரிந்து விட்டதை ஆர்பிஐயின் புள்ளி விவரங்கள் புட்டு புட்டு வைக்கின்றன.
படிப்பறிவில் 16வது இடம்
தேசிய அளவில் பார்க்கும் போது படிப்பறிவு விகிதாச்சாரத்தில் தமிழகம் 80.09 சதவிகிதத்துடன் 16வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, மணிப்பூர், சண்டிஹர், புதுச்சேரி, டெல்லி, கோவா, கேரளா, நாகாலந்து மற்றும் திரிபுராவிற்கு பின்னால் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் அதிக திறன் படைத்தவர்கள் இருந்தாலும் கல்வியறிவில் சற்று பின்தங்கி தான் இருக்கிறது.
ஏழ்மையில் 7வது இடம்
அதே போன்று ஏழ்மை நிலையை எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் அதிக ஏழைகள் உள்ளனராம். அதாவது மொத்தமுள்ள 6.78 கோடி மக்களில் ஏறத்தாழ 1.2 கோடி மக்கள் ஏழைகளாக உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் 7வது இடம் வகிக்கிறது.
தவறான நிதிக்கொள்கை
இந்த புள்ளிவிவரங்கள் மூலம் புலப்படும் விஷயம் என்ன தெரியுமா, தமிழகத்தை ஆண்ட அரசுகள் தேவையான விஷயங்களுக்கு நிதியை செலவிடாமல் இலவசங்களுக்கு கொட்டி கொடுத்துள்ளன என்பது தான். நாட்டின் மொத்த பொருளாதா வளர்ச்சியான ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியது நமது மாநிலம். ஆட்டோமொபைல், கட்டுமானம், ஜவுளித் துறை என எந்தத் துறையானாலும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை நல்ல பொருளாதாரம் ஈட்டுகிறோம். ஆனால் தவறான நிதிக் கொள்கை காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி நிலை தடுமாறி தரைத்தட்டி நிற்பதாக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.