'கடன்கார தேசம்' .... தமிழக அரசின் கடன் சுமார் ரூ4 லட்சம் கோடி? காப்பாற்றும் 'குடி'மகன்கள்?
சென்னை: தமிழகம் திவாலாகிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தலைவர்கள் புகார் கூறும் போதெல்லாம் 'நல்லாத்தான்' இருக்குது என்று பதிலளிப்பது முதல்வர் பன்னீர்செல்வத்தின் வாடிக்கை.. ஆனால் யதார்த்தமோ தமிழகம் பெருங்கடன்கார தேசமாக உருவெடுத்துள்ளது...
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் முதல்வர் பன்னீர்செல்வம், 2015-16ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார். மேலும் இதற்கு தமிழக அரசு கட்டும் வட்டி ஆண்டு ஒன்றுக்கு 17 ஆயிரத்து 139 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது, தமிழக அரசு நேரடியாக கடனாகப் பெற்ற 2,11,483 கோடி ரூபாயை மட்டுமே... ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3%க்கு மேல் கடன்வாங்கக் கூடாது என்பது மத்திய நிதி கமிஷனின் நிபந்தனை. அப்படி வாங்கும் கடனும் 25%க்கு மேல் தாண்டக் கூடாதாம்.
அபாய அளவு...
தற்போதைய நிலையில் தமிழகத்தின் கடனளவு 19.24%... இன்னும் சிறிது காலத்தில் நிதி கமிஷன் விதித்துள்ள அபாய அளவைத் தொட்டுவிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.
ரூ4 லட்சம் கோடி
இது ஒருபுறம் இருக்க தமிழக மின்வாரியம் ரூ1.60 லட்சம் கோடி கடனில் இருக்கிறது.. இதேபோல் இதர அரசு நிறுவனங்களின் கடன்களை கூட்டிப் பார்த்தால் சுமார் ரூ4 லட்சம் கோடி கடனில் இருக்கிறது தமிழகம்.
கடன்கார மாநிலம்
மாநில அரசுகள் நேரடியாகக் கடன் பெறுவதில் குஜராத், மேற்கு வங்கம் ஆகியவை தமிழகத்தை விட முன்னணியில் இருக்கிறது. அதே நேரத்தில் இப்படி மொத்த கடன் பட்டியலில் பார்த்தால் தமிழகத்துக்குத்தான் முதலிடம்... இப்படி கடன் வாங்கினால் தமிழகம் மிகக் கடுமையான பொருளாதார சீரழிவைத்தான் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டும் வருகிறது.
எல்லாம் இலவசம்
சரி... தமிழக அரசு கடன் வாங்கி என்ன செய்தது? எதில் முதலீடு செய்தது? என்ற கேள்விக்கு ஒற்றைப் பதில் எல்லாம் இலவசம்....
உதாரணமாக 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மானியம் மற்றும் இலவசத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை ரூ59,185 கோடி ரூபாய். இதுதான் யதார்த்தம்.
டாஸ்மாக்..
தமிழக அரசு ஓடிக் கொண்டிருப்பது என்பது டாஸ்மாக்கினால் மட்டுமே... டாஸ்மாக் வருவாய் மட்டும்தான் தமிழக அரசுக்கு உருப்படியாக கிடைக்கும் வருமானம்..கலால் வரி, முத்திரை மற்றும் பதிவுத் துறை வரி ஆகிய முக்கிய வருவாய் தரக் கூடிய துறைகளில் நிர்ணயிக்கப்பட்டது ரூ91,835 கோடி... ஆனால் வந்தது ரூ85,772 கோடி.
அதே நேரத்தில் டாஸ்மாக் 2014-15ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ26,188 கோடி; 2015-16ம் ஆண்டுக்கான இலக்கு ரூ 29,672 கோடி. அதாவது ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் குடிமகனாக மாறித்தான் இந்த தமிழ்நாட்டை காப்பாற்றனும் என்கிற நிலையில் இருக்கிறது தமிழக அரசு.
சர்வதேச மாநாடு
இந்த நிலையில்தான் மே மாதம் ரூ1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க சர்வதேச மாநாட்டை தமிழக அரசு நடத்த உள்ளது. ஆனால் தமிழகத்தை நினைத்தாலே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலதிபர்கள்.. மின்வெட்டு உட்பட குறைகளை சரி செய்யாமல் மாநாட்டை கூட்டி என்னதான் பயனோ?
கடன் வாங்காமல் இலவசம் தராமல் அரசுகள் இயங்க முடியாது என்ற வாதம் நியாயமானதாக இருப்பினும் திட்டமிட்ட முதலீடுகளும் அதன் மூலமான வருவாயுமே மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் என்பதே நிதர்சனம். இதைத்தான் ஆட்சியாளர்கள் முதலில் உணர்ந்தாக வேண்டும்.