அதிமுக- பாஜக இரட்டை குழல் துப்பாக்கி கட்டுரையை பிரசுரித்தோர் மீது நடவடிக்கை: 'நமது அம்மா' நாளிதழ்
பாஜகவுடன் கூட்டணி என்கிற கட்டுரையை வெளியிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறது நமது அம்மா நாளிதழ்
Recommended Video
சென்னை: அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் என்கிற கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் பிரசுரித்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்டு நமது அம்மா நாளிதழ், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவருகிறது. இதில் வெளியான கட்டுரை ஒன்றில், அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்; இரண்டு கட்சிகளின் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என கட்டுரை வெளியானது.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர்களோ, ஒரு கட்டுரையின் அடிப்படையில் கூட்டணியை தீர்மானிக்க முடியாது என உடனே மறுப்பும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இப்படியான ஒரு கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் பிரசுரித்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; கட்டுரை கட்சியின் முடிவு அல்ல; கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அஇஅதிமுக எப்போதும் இல்லை. பாஜக, அதிமுக கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அதில் பிரசுரமாகும் கட்டுரையோ முடிவு செய்ய முடியாது. வாசகர் கட்டுரையின் பேரில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது போன்ற குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி என நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது.
பாஜக, அதிமுக கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அதில் பிரசுரமாகும் கட்டுரையோ முடிவு செய்ய முடியாது.
— நமது புரட்சித்தலைவி அம்மா (@DrNamadhuAmma) April 24, 2018
வாசகர் கட்டுரையின் பேரில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது போன்ற குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி. குழப்பங்களுக்கு வித்திடும்வகையில் கட்டுரை ஒப்புதலின்றி பிரசுரமாகியுள்ளது. #AIADMK
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்டேட் செய்யப்படாமல் இருந்த நமது அம்மா நாளிதழின் சமூக வலைதளங்கள் இந்த விளக்கத்தை திடீரென வெளியிட்டுள்ளது. இதனிடையே நமது அம்மா நாளிதழில் இந்த கட்டுரை வெளியானதற்காக பணியாளர்கள் இருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.