அதிகரிக்கும் லாரி வாடகை; ஆன்லைன் வர்த்தகம்- பருப்பு விலை உயர்வு!
சென்னை: டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரித்துள்ளதால் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆளும் பாஜக அரசு அனுமதி அளித்துள்ளதால் பருப்பு விலைகள் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு தேவையான காய்கறிகள், அத்தியாவசிய மளிகை பொருட்களுக்கு வெளி மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, சண்டிகர், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு, தனியா (கொத்தமல்லி), பூண்டு, புளி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவை சரக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் லாரி வாடகையும் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி அதிகரிப்பு
வடமாநிலங்களிலும், தமிழகத்திலும் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்துள்ளதால், தானிய வகைகள் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால், மளிகை பொருட்கள் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது லாரி வாடகை உயர்வால் மளிகை பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விலை குறைந்த பொருட்கள்
தற்போதைய நிலையில், தமிழகத்தில் விளையும் குண்டு மிளகாய் (ஒரு கிலோ) ரூ.170ல் இருந்து ரூ.100 ஆகவும், நீட்டு மிளகாய் ரூ.120ல் இருந்து ரூ.90 ஆகவும், பூண்டு (நாடு) ரூ.130ல் இருந்து ரூ.80 ஆகவும், ஊட்டி மலைப்பூண்டு ரூ.160ல் இருந்து ரூ.100 ஆகவும், புளி ரூ.130ல் இருந்து ரூ.90 ஆகவும், தனியா (கொத்தமல்லி) ரூ.140ல் இருந்து ரூ.110 ஆகவும் விலை குறைந்துள்ளது. இதேபோல், அரிசி வகைகள் விலையும் மூட்டை (25 கிலோ) ரூ.50 விலை சரிந்துள்ளது.
லாரி வாடகை உயர்வு
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மளிகை பொருட்களை எடுத்து வரும் லாரிகளின் வாடகை உயர்வால், மளிகை பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து இருப்பதாக தமிழ்நாடு அனைத்து மளிகை பொருட்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகம்
இதேபோல், ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பருப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டதால், விலையும் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதற்கு கடந்த காங்கிரஸ் அரசு தடை விதித்ததை தொடர்ந்து, பருப்பு வகைகள் விலை குறைந்தது. ஆனால், தற்போதைய பா.ஜ.க. அரசு மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதனால், பருப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளது.
பருப்பு வகைகள்
கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு மூட்டை 8,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது துவரம் பருப்பு மூட்டை 9,400 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் கிலோ 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல், உளுந்தம் பருப்பு மூட்டை ரூ.8 ஆயிரத்தில் இருந்து 8,500 ரூபாயாகவும், பாசி பருப்பு மூட்டை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து10,700 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் ரத்தாகுமா?
50 கிலோ எடை கொண்ட கடலை பருப்பு மூட்டை 1,200ரூபாயில் இருந்து 1,300 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. எனவே, ஆன்லைன் வர்த்தக அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளைச்சல் அதிகரித்தும்
அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தும் லாரி வாடகை உயர்வு, ஆன்லைன் வர்த்தகம் காரணமாக விலை உயர்வு அதிகரித்துள்ளது. இதனால் நுகர்வோர் கலக்கமடைந்துள்ளனர்.