முதலில் பெட்ரோல், இப்போது கேஸ் சிலிண்டர்... இன்னும் என்னவெல்லாம் கொடுக்க போகிறார்களோ?
Recommended Video
கடலூர்: கேஸ் சிலிண்டர் எரிவாயுவின் விலை உயர்வு சுட்டிக் காட்டும் விதமாக கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு நண்பர்கள் கேஸ் சிலிண்டரை பரிசாக வழங்கியுள்ளனர்.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஆர்ப்பாட்டம் , போராட்டம் மூலம் தங்கள் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் காட்டி வருகின்றன. அதே சமயம் பொதுமக்கள் கலகலப்பான முறையில் தங்கள் எதிர்ப்பை காட்ட முயற்சித்து வருகின்றனர்.
பரிசளிப்பு
இதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் செல்வக்குமார்- கஸ்தூரியின் நண்பர்கள் காஸ் சிலிண்டரை பரிசாக கொடுத்தனர். எரிவாயு உருளையின் விலை உயர்வை சுட்டிக் காட்டும் விதமாக அவர்கள் இதுபோல் பரிசளித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாராட்சி கிராமத்தில் இளஞ்செழியன், கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருமண மண்டபம்
அப்போது திருமணத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்தனர். இதனால் திருமண மண்டபமே கலகலத்தது.
பரிசாக வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பது தெரிந்த ஒன்றே. தற்போது கேஸ் சிலிண்டர், பெட்ரோலை பரிசாக வழங்கிய இவர்கள் இன்னும் சில நாட்களில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, புளி, மிளகாய், பருப்பு, பால் பாக்கெட் ஆகியவற்றையும் பரிசாக வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.