அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் என்ஜினியரிங் கவுன்சிலிங்... அரசு முடிவு பலன் தருமா?
2018 முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திடம் அரசு வலியுறுத்தியுள்ளது.
சென்னை : 2018 முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ, எம்.டெக், எம். ஆர்க், உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அரசு நவம்பர் 6இல் வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த அரசாணை வெளியிட்டது முதல் 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் கவுன்சலிங்
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் வந்து செல்ல சிரமப்படுவதால் ஆன்லைன் முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சாப்ட்வேர் வடிவமைப்பு
ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கு வசதியாக மென்பொருளை வடிவமைக்கும் பணி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் கலந்தாய்வு பொறுப்பை பார்த்துக் கொள்வதற்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான செயலாளராக மீண்டும் பேராசிரியர் ரைமண்ட் உதரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று 14 பேர் கொண்ட குழுவினர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு
ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவது நகரம் மற்றும் டயர் 2 நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு பயனளித்தாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ்ர்களுக்கு இது பலன் அளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறி இருந்தது.
பெற்றோர் வேண்டுகோள்
ஆனால் அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபாலிலும் நேரிலும் அளித்தனர். எனவே மாணவர்களுக்கு பாதிப்பில்லாமல் பலன் அளிக்கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோரின் வேண்டுகோளாக உள்ளது.