அம்மா உணவகம்.. மகளிர் காவல்நிலையம்... தொட்டில் குழந்தைகள்.. ஜெ.வின் முத்தான திட்டங்கள்
அம்மா உணவகம் உள்ளிட்ட பல முத்தான திட்டங்களை அமல்படுத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
சென்னை: அம்மா உணவகம், மழைநீர் சேகரிப்பு, மகளிர் காவல்நிலையம் என பல அருமையான திட்டங்களை தம்முடைய ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தியிருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். காலம் அவரை தமிழர்களிடம் இருந்து பிரித்துவிட்டாலும் காலத்தாலும் பேசப்படும் பல திட்டங்களை தம்முடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்.
ஜெயலலிதா தம்முஐய ஆட்சிக் காலத்தில் அமல்படுத்திய சில திட்டங்கள்:
அனைத்து மகளிர் காவல் நிலையம்
1992-ம் ஆண்டு முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையத்தை உருவாக்கினார். தமிழகம் முழுவதும் 200 மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார்.
தொட்டில் குழந்தை திட்டம்
பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1992-ல் சேலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டம் மூலம் 2011-ல் தமிழகத்தில் பெண் குழந்தை விகிதம் அதிகரித்தது.
புதிய வீராணம் திட்டம்
சென்னை நகரின் குடிநீர் பஞ்சத்தை போக்க புதிய வீராணம் திட்டத்தை 2004-ம் ஆண்டு அமல்படுத்தினார். அண்ணா, கருணாநிதி ஆட்சிக் காலங்களில் ஏட்டளவில் இருந்த இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி சென்னையின் குடிநீர் தாகம் தீர்த்தவர் ஜெயலலிதா.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
2001-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கினார் ஜெயலலிதா. இதன் மூலம் சென்னை நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
இலவச லேப்டாப்
2011-ம் ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த 3.25 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர்.
அம்மா உணவகங்கள்
தமிழகம் மட்டுமல்ல... உலக அளவில் ஏறெடுத்துப் பார்க்க வைக்க ஜெயலலிதாவின் உன்னத திட்டம் 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவகம். இட்லி ரூ1க்கும் பொங்கல் ரூ5க்கும் வழங்கிய இந்த உன்னத திட்டம் தமிழகத்தின் பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது.