கடும் குடிநீர் தட்டுப்பாடு.. ஜூலை 15 முதல் சென்னைக்கு போரூர் ஏரி நீர் வழங்க.. ஏற்பாடு தீவிரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த 4 ஏரிகளும் வறண்டன. ஜூலை 15ம் தேதி முதல் போரூர் ஏரி நீரை சென்னைக்கு வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டுவிட்டதால் போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக விநியோகிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள்தான் சென்னைவாசிகளின் தாகத்தை தீர்த்தது வந்தன.
இந்த ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீரில் இருந்து ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர், சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது முற்றிலும் காய்ந்து வறண்டு கிடக்கின்றன.
பாதியாக குறைக்கப்பட்ட குடிநீர்
இதனால் சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் பாதியாக குறைக்கப்பட்டது. சுமார் 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தற்போது சென்னைவாசிகளுக்காக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
3 நாளைக்கு ஒருமுறை விநியோகம்
இதனால், சென்னையின் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர 300 லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படுகிறது.
காய்ந்த வீராணம்
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதும் முற்றுலும் நின்றுவிட்டது. அதற்கான அமைக்கப்பட்ட குழாய்கள் காய்ந்தே கிடக்கின்றன. இந்நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து நீரை உறிஞ்சி இந்தக் குழாய்களின் வழியே சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் அனுப்பப்பட்டு வருகிறது.
கல்குவாரி நீர்
இதுதவிர காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு அது சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீரும் சென்னைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
போரூர் ஏரி
இந்நிலையில், போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக பயன்படுத்த குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அந்த வழியாக செல்லும் வீராணம் குழாயில் போரூர் ஏரி தண்ணீரை அனுப்ப குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூலை 15ல் தொடக்கம்
குழாய்கள் இணைக்கும் பணிகள் இன்னும் 10 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் போரூர் தண்ணீரை சென்னைக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு திணறல்
தினமும் 4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு போரூர் ஏரி தண்ணீரை பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு திணறி வருகிறது. அதனால் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.