பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னை வர வேண்டாம் வந்துவிட்டது ஆன்லைன் கலந்தாய்வு!
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : கடந்த 21 ஆண்டுகாலமாக பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்று வருகின்றனர். ஒன்றரை லட்சம் மாணவர்கள் இதற்காக வந்து செல்வதை தவிர்க்கும் விதத்தில் ஆன்லைனில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2018-19ம் கல்வியாண்டு முதலே இணையதளம் மூலமாக பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். இதுவரை கலந்தாய்விற்காக வரும் மாணவர்கள்,அவர்களின் பெற்றோருக்கான பேருந்து செலவு உள்ளிட்ட வசதிகள் 21 ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அவர்கள் வீட்டில் இருந்த படியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இணையதளம் மூலமாக தேர்வு செய்ய முடியாதவர்கள் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 44 மையங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.