இன்று முதல் கோவை, நெல்லைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து கோவை, நெல்லை, திருவாரூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து கோவை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு கொடுக்க வேண்டிய ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் ரூ.1250 கோடி மட்டுமே வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதலே சென்னை, கும்பகோணம், அரியலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
இன்று நடத்தவிருந்த போராட்டத்தை தொழிலாளர்கள் நேற்றே தொடங்கியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து கோவை, நெல்லை, திருவாரூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
காலை 7.40 மணிக்கு புறப்படும் எழும்பூர்- நெல்லை ரயிலில் 15 பொதுப் பெட்டிகள் இருக்கும். நெல்லையில் இருந்து எழும்பூருக்கு இரவு 10.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். கோவையில் இருந்து சென்னைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் ரயிலில் 15 பெட்டிகள் இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்- கோவை ரயில் இரவு 8.30 மணிக்கு புறப்படும். எழும்பூர்- திருவாரூர் சிறப்பு ரயில் காலை 8 மணிக்கு புறப்படும். திருவாரூருக்கு மட்டும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது.