உடுமலை அருகே குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை
திருப்பூர்: உடுமலை அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு நவீனா, குகன் ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். குழந்தைகள் இருவருக்கும் காது கேளாதக் குறைபாடு இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கலைச்செல்வி கடந்த சில நாள்களாக வேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை எழுந்த கலைச்செல்வி, வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். இரு குழந்தைகளையும் பெரிய கல்லுடன் கயிற்றினால் கட்டி, கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர், கயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில், மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காலையில் எழுந்த செல்வராஜ் தனது மனைவி, குழந்தைகளைத் தேடியபோது, அவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
உடுமலை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.