தமிழகத்தின் இடஒதுக்கீட்டுச் சட்டம் மோசடியானது- திருத்தப்பட வேண்டும்: ஜி.கே. மணி வலியுறுத்தல்
தமிழகத்தின் இடஒதுக்கீட்டுச் சட்டம் மோசடியானது, அது திருத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தின் இடஒதுக்கீட்டுச் சட்டம் மோசடியானது, அது திருத்தப்பட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக சமூக நீதி மாநாட்டில் பாமக தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.
இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக நடத்தியது.
மாநாட்டு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருத்தப்பட்டது
இந்த மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இந்தியாவின் அரசியல் சாசனம் முதன் முதலாக சமூக நீதிக்காக திருத்தப்பட்டது. அம்பேத்கர், விபி சிங் பதவிகளில் இருந்து இடஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். எந்த பதவியிலும் இல்லாமல் மக்களைத் திரட்டி எம்பிசிக்கு 20% இடஒதுக்கீட்டு பெற்றுத் தந்தவர் ராமதாஸ்.
மோசடியானது
தமிழகத்தின் இடஒதுக்கீட்டுச் சட்டம் மோசடியானது. தமிழகத்தின் இடஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்பட வேண்டும். ஆந்திரா, கர்நாடகாவில் இடஒதுக்கீட்டுச் சட்டம் சரியாக இருக்கிறது. செப்டம்பர் 17-ஆம் தேதியை சமூக நீதி தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார் ஜி.கே.மணி.
காடுவெட்டி குரு பேச்சு
இந்த மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பேசுகையில், 21 இடஒதுக்கீட்டு போராளிகளை சுட்டுக் கொல்ல அதிமுக, திமுக காரணம். தந்தை பெரியாருக்குப் பின்னர் சமூக நீதிக்கு போராடிய ஒரே தலைவர் ராமதாஸ் மட்டும்தான்.
சாராயம் மட்டும்தான்
ஆட்சியாளர்கள் தமிழகத்துக்கு தந்தது சாராயம் மட்டும்தான். குடிபழக்கத்தில் இருந்து தமிழகத்தை மீட்க போராடுகிறவர்கள் ராமதாஸும், அன்புமணியும்தான்.
90,000 மதுகடைகளை இந்தியா முழுவதும் மூடியதற்கு காரணம் அன்புமணி. ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் தன்மானத்தை இழந்து குடிகாரர்களாக்கப்பட்டுவிட்டனர். தமிழர்கள் தன்மானத்துடன் வாழ அன்புமணி முதல்வராக வேண்டும் என்றார்.