3 தொகுதி தேர்தலில் போட்டியில்லை... யாருக்கும் ஆதரவில்லை- ஜி.கே. வாசன்
நவம்பர் 19ம் தேதி நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை: திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் 3 தொகுதிகளிலும் யாருக்கும் ஆதரவு இல்லை என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடாது கயட்சிகளுக்கு புதிதல்ல என வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் கட்சிகள் விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவீர்கள் என்று கேட்டதற்கு, இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் மக்கள் தங்களின் மனசாட்சிப் படி வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.
காவிரி தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றதற்கும், இடைத்தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மே மாதம் நடைபெற்ற 2016 சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் காலியாக இருந்தன.
காலியாக உள்ள இந்த மூன்று தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்ஆணையம் அறிவித்தது. அதன்படி மூன்று சட்டசபைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று புதன்கிழமை தொடங்கியுள்ளது.
இந்த தொகுதியில் ஆளுங்கட்சி அதிமுகவிற்கும், பிரதான எதிர்கட்சியான திமுகவிற்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தலுக்கு தயாராகிவிட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்கள் வைகோ, திருமாவளவன் அறிவித்துள்ளனர்.
பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஆனால் வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.