ம.ந.கூ.விலிருந்து மதிமுக விலகுவது எதிர்பார்த்ததுதான்: ஜி.கே. வாசன்
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ராமமோகன ராவ் அளித்திருக்கும் பேட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வாசன் வெளியிட்ட அறிக்கை:
''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று. எனவே இதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் அளித்திருக்கும் பேட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் துணை ராணுவத்தினர் உதவியுடன் சோதனை நடத்திய பிறகு இன்று அவர் அளித்திருக்கும் பேட்டி குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
மேலும் ஏற்கெனவே நடந்த வருமான வரி சோதனை பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவராதது என்பது மத்திய, மாநில அரசுகளின் மீது மேன்மேலும் சந்தேகத்தை அதிகரித்து இருக்கிறது.
உண்மை நிலையை வெளிப்படுத்துவது ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் பொறுப்பு, கடமை. அதை மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.