மதமாற்றத் தடைச் சட்டம் மூலம் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதா?: வாசன் கண்டனம்
சென்னை: கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவோம் எனக் கூறி சிறுபான்மையினரை மத்திய அரசு அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார் ) தலைவர் ஜி.கே. வாசன்.
தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி சார்பில் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கிய இந்த விழாவில் கிறிஸ்துமஸ் ‘கேக்' வெட்டி, தையல் எந்திரம் மற்றும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார் ) தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன். தென் இந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் துணைத்தலைவர் ஒய்.எல்.பாபுராவ் ஆசியுரை வழங்கினார்.
சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், ராமசுப்பு, பிஜூ சாக்கோ, கோவை தங்கம், ஏ.எஸ்.ஜார்ஜ், வில்லிவாக்கம் சுரேஷ், தாஸ் பாண்டியன், அனுராதா அபி, சைதை ரவி, பானு லாரன்ஸ், ராணி கிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
மத்திய பாஜக அரசு ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு எதிராக வகுப்புவாதத்தை வளர்க்கும் வகையில் நடந்து கொள்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற இந்து அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசுவதை அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்துக்களாக மாற்றி வருகின்றனர். இது பற்றி கேட்டால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவோம். நீங்கள் ஏற்கத் தயாரா? என கேட்கிறார்கள். ஆனால், கட்டாய மதமாற்றம் குறித்து எதுவும் பேசாமல் பிரதமர் மோடி மௌனம் சாதிக்கிறார்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவோம் என மத்திய அமைச்சர்கள் பேசுவதற்குப் பின்னால் மிகப்பெரிய உள்நோக்கம் உள்ளது. சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு பேசி வருகிறார்கள். இதனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
மதசார்பற்ற விழா நடைபெறுகிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தது தமிழ் மாநில காங்கிரஸ் தான். ஜனநாயகம், மதச்சார்பின்மை கொள்கை ஆகியவை நாட்டின் இரு கண்கள். இந்த கொள்கைகளை தமிழ்மாநில காங்கிரஸ் காப்பாற்றும். மதம் மக்களை இணைக்கவேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது. அரசு, அதிகாரம் ஆகியவற்றிற்கு மதம் கிடையாது.
அனைத்து சமுதாயத்தினரையும் சமமாக பாவிக்கவேண்டும். பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மையினரிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை கொண்டிருக்கிறது. மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறியவர்கள் தற்போது மதமாற்றம் மட்டும் செய்கிறார்கள். வளர்ச்சிக்கு வழிவகுப்போம் என்று கூறியவர்கள் வகுப்புவாதத்திற்கு வழிவகை செய்கிறார்கள்.
கிறிஸ்தவ மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக, பாதுகாப்பு அரணாக, உற்ற நண்பனாக மற்றும் சேவகனாக எப்போதும் இருப்போம். நீங்கள் நேரடியாக கட்சியில் சேர்ந்து, உங்களுடைய ஆதரவினை எங்களுக்கு தரவேண்டும்' என இவ்வாறு அவர் பேசினார்.