மக்களுக்காக சுதந்திர தினத்தன்று மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: சுதந்திர தினத்தில் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. மாநில மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவி மகேஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மகளிர் அணியின் தீர்மானத்தை வெளியிட்டு பேசிய வாசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இனியும் அரசு மவுனம் காக்கக்கூடாது.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டத்தில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து உள்ளது. இதற்கு காரணம் தொழிலாளர்கள் நலன் கருதி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
உடனடியாக பிரதமர் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறை மந்திரியை தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச வைக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கும். வாழ்வாதாரத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தேர்தலை நோக்கி த.மா.கா. பயணித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
மதுவுக்கு எதிராக மாணவர்கள் நியாயமான முறையில் போராடி வருவதை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய தமிழகம் நலன்சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு கிடப்பில் போடாமல் நிறைவேற்ற வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் சாருபாலா தொண்டைமான் முன்னாள் எம்.பி.ராணி, மாதவி, மாநில துணை தலைவர் கிளாடிஸ் லில்லி, மைதிலி தேவி, கவுரிகோபால், நந்தினி, உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.