விருந்துக்குக் கூப்பிட ஆள் இல்லை.. இதுல எங்க போறதுன்னு ஜி.கே.வாசன் ஆலோசனை!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என த.மா.கா. இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் அக்கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே மும்முரமாக நடந்து வருகின்றன. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன. ஆனால், தொடர்ந்து பிடி கொடுக்காமல் கழுவுற நீரில் நழுவுற மீனாக அக்கட்சி உள்ளது.
கடந்த முறை தனித்தே வெற்றிக் கொடி நாட்டிய அதிமுகவும், இம்முறை கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இது அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதிலேயே ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க வைகோ தலைமையில் அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டியக்கம், தங்களை வரும் தேர்தலில் நிலையான அமைப்பாக காட்டிக் கொள்ள மற்ற கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன் ஆகியோரை அவர்கள் சந்தித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணியைத் தவிர வாசனிடம் வேறு கட்சிகள் எதுவும் இதுவரை கூட்டணி குறித்துப் பேசவில்லை. பேசும் எண்ணத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை.
காரணம் கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி த.மா.கா என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார் வாசன். புதிதாக உருவான தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க வாசன் இதுவரை எவ்வித முயற்சிகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இதனால், வாசனைத் தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் எதுவும் ஈடுபாடுகாட்டவில்லை. பாமகவும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளை அழைத்து நேர்காணல் நடத்தியுள்ளார் வாசன். அதில், சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என அவர் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்துக் கேட்டுள்ளார்.
அப்போது பெரும்பாலான நிர்வாகிகள், 'தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும்; மக்கள் நல கூட்டணியில் இணைவது தற்கொலைக்கு சமம்' எனக் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், இந்த இரண்டு கட்சிகளுமே வாசனை கூட்டணிக்கு அழைக்காத நிலையில், இவரே வலியப்போய் அவர்களுடன் கூட்டணி வைப்பாரா, இல்லை, கிடைத்த மரியாதை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக மக்கள் நலக் கூட்டணியிலேயே ஐக்கியமாவாரா என்பதை என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.