சசிபெருமாள் குடும்பத்தினருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு! மது விலக்கு கொண்டுவர அரசுக்கு வலியுறுத்தல்
சேலம்: மது விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தாரை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணமடைந்த சசிபெருமாள் குடும்பத்தார், மதுவிலக்கு கேட்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சேலத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சசிபெருமாள் குடும்பத்தாருடன் மேலும் சில தன்னார்வலர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். தனது ஆதரவு உண்டு என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
நிருபர்களிடம் வாசன் கூறுகையில், "சசிபெருமாள் உயிர் தியாகத்துக்கு தமிழக அரசு மரியாதை செலுத்த வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், உடனடியாக முடியாவிட்டால் படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.