நல்ல மனிதர், பண்பாளர், அமைதியானவர்.. ஓ.பி.எஸ் பற்றி வாசன் புகழாரம்! மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது பன்னீர்செல்வமும், ஜி.கே.வாசனும் கூட்டாக பேட்டியளித்தனர்.
வாசன் கூறியதாவது: இன்றைய தமிழக மக்கள் விரும்பும் தலைவர், மறைந்த புரட்சி தலைவியின் அன்பை, நம்பிக்கையை பெற்றவர் ஓ.பி.எஸ். இவரது தலைமையிலான, அதிமுக தர்ம யுத்தத்திற்கு துணை நிற்க கூடிய உறுதியான கட்சியாக த.மா.கா செயல்படும் என்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை பொறுத்தளவில், த.மா.காவிற்கு இடைத் தேர்தலில் நம்பிக்கையில்லை என்பதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறியிருந்தேன்.
சுற்றுப் பயணம்
எனது சுற்றுப் பயணத்தின் மூலம், 26 வருவாய் மாவட்டங்களுக்கு சென்று, நகர, வட்டார, கிராமங்களுக்கு சென்று இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கொண்டுள்ளேன். பெரும்பாலான மாவட்டங்களில் சுற்றுப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இயக்கத்திற்கு பலம் சேர்ப்பதே இதற்கு நோக்கம்.
ஜெ. நம்பிக்கைக்குரியவர்
இந்த நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் அவர் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் ஆர்.கே.நகரில் மதுசூதனனை ஆதரிக்க வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். வருவாய் மாவட்டங்களில் நான் சந்தித்த பெரும்பாலான நிர்வாகிகள் இதே கருத்தை என்னிடம் வலியுறுத்தினர். மறைந்த முதல்வர் புரட்சி தலைவி, தனது பணியை சிறப்பாக செய்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பணியாற்ற முடியாத சூழல் இருந்தபோது, ஓ.பி.எஸ்சைதான், முதல்வர் பதவியில் அமர வைத்து, தனது நம்பிக்கைக்கு உரியவராக அடையாளம் காட்டினார்.
நல்லவர், வல்லவர்
ஓ.பி.எஸ்சை பொறுத்தளவில், தமிழக மக்களால் கூறப்படும் ஒரே வார்த்தை, நல்ல மனிதர். பண்பாளர், அமைதியானவர், ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர், மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்க கூடியவர் என்கிறார்கள். மக்கள் மனநிலை அவர் பக்கம்தான் உள்ளது. மதுசூதனன் எம்ஜிஆர் காலத்திலேயே அவர் நம்பிக்கையை பெற்ற மூத்த தலைவர்.
த.மா.கா ஆதரவு
ஆர்.கே.நகர் களத்தில் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக மதுசூதனன் நிற்கிறார். மக்கள் மனநிலையை நன்கு உணர்ந்து முடிவுகளை எடுப்பது அரசியல் இயக்கத்திற்கு அவசியம். அது கட்சியிலுள்ள பெரும்பாலானோர் ஏற்பதாகவும் இருக்க வேண்டும். எனவேதான், த.மா.கா, ஆர்.கே.நகரில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை மனநிறைவோடு ஆதரிக்க முடிவெடுத்துள்ளது.
பிரசாரம்
ஆர்.கே.நகர் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதலே தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார்கள். நாளை மறுதினம் மாலையில், ஓ.பி.எஸ்சோடு நான் இணைந்து வாக்கு சேகரிக்க உள்ளேன். தேர்தல் இறுதி கட்ட பிரசார நாளில் மதியம் 2 மணியிலிருந்து வெற்றி பேரணியில் நான் பங்கேற்கிறேன். மக்கள் விரும்பினால் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்.
இவ்வாறு வாசன் தெரிவித்தார்.