மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளியேறியது தமாகா? வாசன் பரபரப்பு பேட்டி
சென்னை: மக்கள் நல கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறிவிட்டதாக தெரிகிறது. உல்ளாட்சி தேர்தலில் எந்த கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பது பற்றி தொண்டர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன், கூட்டணி வைத்து 26 தொகுதிகளில் களம் கண்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ஆனால், 26 தொகுதிகளிலும் படுதோல்வியே பரிசாக கிடைத்தது.
இதையடுத்து, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமாகா தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள், வாசனை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள்.
யோசனை
தோல்விக்கு காரணம், மக்கள் நல கூட்டணியின் பலவீனம்தான் என்பது தொண்டர்கள் கருத்தாக உள்ளது. இதுகுறித்து வாசனும் கடந்த சில நாட்களாக தீவிர யோசனையில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக மீடியா நிறுவனங்களுக்கு, நேற்று அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் வாசன். இதனால் மக்கள் நல கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை வாசன் அறிவிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
உள்ளாட்சி தேர்தல்
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த வாசன் கூறியது: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
கருத்து கேட்பு
32 வருவாய் மாவட்டங்களை 12 மண்டலங்களாக பிரித்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். இந்த 12 மண்டலங்களிலும் சுற்றுப் பயணம் செய்து கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்க முடிவு செய்துள்ளேன்.
27ம் தேதி துவக்கம்
இம்மாதம் 27ம் தேதி சுற்றுப்பயணம் ஆரம்பமாகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மண்டலத்தில் இருந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். இவ்வாறு வாசன் தெரிவித்தார்.
மனதளவில் வெளியேறியது
வாசன் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம், கூட்டணி குறித்து ஆலோசிக்கத்தான் என்பது தெளிவாகிவிட்டது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளதன் மூலம், மக்கள் நல கூட்டணியைவிட்டு மனதளவில் வெளியேறிவிட்டார் என்று தெரிகிறது.