கட்சி விளக்கப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார் வாசன்.. ‘நாளை நமதே’சிடியும் வெளியீடு!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனது புதிய கட்சி மற்றும் திருச்சி மாநாட்டு விளக்க பிரச்சாரத்தை இன்று துவக்கி வைத்தார். அப்போது, ‘நாளை நமதே' என்ற சிடியையும் அவர் வெளியிட்டார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். வரும் 28ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், தங்களது புதிய கட்சிக்கான பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை வெளியிடப் போவதாக அவர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய கட்சி தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி தொடர்பான விவரங்களை பதியும் நடவடிக்கைகளிலும் வாசனும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஜி.கே.வாசனின் புதிய கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரமாண்ட எல்.இ.டி. திரை பொருத்திய பிரசார வேன் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார் பேட்டை இல்லத்தில், புதிய கட்சி மற்றும் திருச்சி மாநாட்டு விளக்கப் பிரச்சாரத்தை துவக்கி வைத்த வாசன், நாளை நமதே என்ற திருச்சி மாநாட்டு அழைப்பு சிடியையும் வெளியிட்டார்.
காமராஜர், மூப்பனார் கொள்கைகளை பரப்பும் பாடல்கள் அடங்கிய அந்த சி.டி.யை வாசன் வெளியிட, அதை முக்தா சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக சென்னை 25-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் வந்தனா அவரது கணவர் பர்ணபாஸ் தலைமையில் 300 பேர் ஜி.கே.வாசன் கட்சியில் இணைந்தனர்.
விழாவில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘புதிய இயக்கம் பற்றி அறிவிப்பை வெளியிட்டது முதல் ஏராளமனோர் ஆதரவு அளித்து வருவதாகவும், 28-ந்தேதி திருச்சியில் நடைபெறும் கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் சி.டி.யையும், பிரசார பாடல்கள் அடங்கிய சி.டி.யையும் வெளியிட்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், வரும் 25-ந்தேதி மீண்டும் ஒரு சி.டி. வெளியிடப்படும் என்றும், திருச்சி மாநாடு நமது லட்சியத்தை எட்ட அடிக்கல் நாட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும்' என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வாசன் ஆதரவாளர்களாக உள்ள முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது :-
இன்று தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. அவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடிக்க உறுதி ஏற்றுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்புக்கும் இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
28-ந்தேதி திருச்சியில் நடைபெறும் கட்சி அறிமுக விழா கூட்டத்தக்கு பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நாளை நடைபெறுகிறது. முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசு சட்டத்தை மதிக்கிறது. கேரள அரசும் சட்டத்தை மதிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசனின் வெளிநடப்பை, மரத்திலிருந்து விழுந்த கிளை, இலை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘நாங்கள் கிளையோ, இலையோ அல்ல, விதை. ஆலமரமாக வளர்வோம்' எனத் தெரிவித்துள்ளார் வாசன். மேலும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலைக் குறி வைத்து கட்சியைப் பலப் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.