கைத்தறி நெசவாளர் பிரச்சினைக்கு விரைவில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்; ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பிரச்சினைக்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சுமார் 1354 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியம் வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியால் அனுமதிக்கப்பட்ட காசுக்கடன் முழுவதையும் பெற்றுவிட்டதால் தொடர்ந்து சங்கங்களை சரியான முறையில் இயங்க நிதி வசதியின்றி உள்ளது.எனவே, அரசு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத் தொகைகள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களின் இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும். இதன் மூலம் கைத்தறி தொழிலும் வளம் பெற்று அத்தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.