பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற ஜி.ராமகிருஷ்ணன் கைது
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
சென்னை: தமிழக அரசால் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மாதம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிதி ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக அரசு அறிவித்தது. அதனால் ஊழியர்கள் கேட்கும் ஊதிய உயர்வை இப்போது கொடுக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
இதையடுத்து நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பேருந்துகளின் கட்டணத்தை 60 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து சொற்ப அளவில் மட்டுமே கட்டணத்தை குறைத்தது. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி இடதுசாரிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியன் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை பாரிமுனையிலிருந்து பேரணியாக சென்று சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மீறியும் அவர்கள் முற்றுகையிட முன்னோக்கி வந்ததால் போலீஸார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவருடன் போராட்டத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.