சீதாராம் யெச்சூரி மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல்: ஜி.ஆர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சீதாராம் யெச்சூரி மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சீதாராம் யெச்சூரி மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் போர்வையில் நுழைந்து சீதாராம் யெச்சூரியைத் தாக்கியுள்ளனர். தத்துவார்த்தரீதியாக அம்பலப்பட்டுப் போயிருக்கும் சங்பரிவார், விமர்சனங்களை முன்வைப்பவரை நேரடியாகத் தாக்குவது அவர்களின் அவக்கேடான வரலாறாக இருக்கிறது.
சங்பரிவாரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாதாரண உறுப்பினர்கூட அஞ்சமாட்டார்கள். இன்னும் வேகத்துடனும், வீரியத்துடனும் சங்பரிவாரின் நாசகார கொள்கைகளையும், குணத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஊழியர்களும், ஆதரவாளர்களும் அம்பலப்படுத்துவார்கள்.
தமிழகம் முழுவதும் கட்சியின் அனைத்து அமைப்புகளும் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக கண்டன இயக்கங்களை வலுவாக நடத்திட வேண்டும். சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் சங்பரிவாரின் இந்த அவக்கேடான செயலை அம்பலப்படுத்த வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டம் தெரிவித்துள்ளது. சீத்தராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன்,இதுபோன்ற தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.