எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை : ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில் : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் தமிழக காவல்துறை கைது செய்யாமல் இருக்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலில் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல்நிறைந்துவிட்டது.
மக்கள் பிரச்னைகளையும், அரசியல் பிரச்னைகளையும் கையாள்வதில் கடந்த 2 வருடங்களாக தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்கள் அதைப்பற்றி கொஞ்சமும் கவலை இன்றி இருக்கிறார்கள்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய எஸ்.வி சேகரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், அவரை இன்னமும் தமிழக காவல்துறை கைது செய்யாமல் இருக்கிறது. அது ஏன்?
கேரளாவில் அரசுப் பள்ளிகளை சர்வதேச தரத்தில் உயர்த்த அம்மாநில அரசு முயற்சித்து வரும் வேளையில், தமிழகத்தில் அடுத்தடுத்து 800 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.