எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆட்சியில் தொடர அருகதையில்லை - ஜி. ராமகிருஷ்ணன்
மாணவி அனிதாவின் கனவை மத்திய, மாநில அரசுகள் சிதைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தராமல் தமிழக அரசு துரோகம் செய்து விட்டது என்றும், எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆட்சியில் தொடர அருகதையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார். அனிதா என்ற ஏழை மாணவியின் கனவை நீட் தேர்வு சிதைத்து விட்டது.
கல்வி அதிகாரம் மாநில அரசியலின் பட்டியலில் இருந்தது. பொதுப்பட்டியலுக்கு சென்ற பின்னர் மாநில அரசுகளின் உரிமை பறிபோய்விட்டது.
மருத்துவ படிப்புக்கு மட்டுமல்ல இனி சித்தா, ஹோமியோவிற்கும் நீட் தேர்வு வரப்போகிறது. மேக் இன் இந்தியா என்று சொல்லும் மோடி, நீட் தேர்வு நடத்த அமெரிக்க நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் விட்டது ஏன்.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல நீட் தேர்வுக்கு எதிராக மகத்தான போராட்டம் நடத்தினால் அவசர சட்டம் பிறப்பிக்கலாம்.
உச்சநீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள உத்தரவில், போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசை விமர்சிக்கலாம். அமைதியான போராட்டம் நடத்தலாம். மாற்று கருத்தை முன் வைக்கலாம். ஒவ்வொரு குடிமகனுக்கு அமைதியான வழியில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்று கூறியுள்ளது என்றும் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.