"சோதனைகளை தகர்த்தெறிவார்" முதல்வர் ஜெயலலிதா - ஜி.ராமகிருஷ்ணன் அப்பல்லோவில் பேட்டி
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டறிந்தார்.
சென்னை: பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா இதிலிருந்தும் மீண்டு நிச்சயம் குணமடைவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து இசிஎம்ஓ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தமிழகம் முழுவதும் அசாதரண சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஜெயலலிதா குணமடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் எனக் கூறினார். மேலும், பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா இதிலிருந்தும் மீண்டு நிச்சயம் குணமடைவார் என அவர் தெரிவித்தார்.