சபாஷ்! கல்விக்கு கை கொடுத்த ஜி.வி. பிரகாஷ்
அரசு பள்ளிகளுக்கு உதவி செய்ய ஜி.வி.பிரகாஷ் முன்வந்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜி.வி.பிரகாஷ்!
தொடர்ந்து சமூக பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருபவர். அதற்காக போராடியும் வருபவர். ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா மரணம், விவசாயிகள் பிரச்சனை, நடைமுறை அவலங்கள், அரசியல் விவகாரம் என அனைத்து விதமான சீர்கேடுகளுக்கும் குரல் கொடுத்து வருபவர். இவரது
சில ட்விட்டர் அதிகம் பேசப்படுபவைகளாக இருக்கும். குறிப்பாக ஜி.வி.யை திரும்பி பார்க்க வைத்தது, அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று பதிவிட்ட கருத்தான, "மறதி ஒரு தேசிய வியாதி" என்பது. இந்நிலையில், அரசாங்கம் செய்யாத ஒரு காரியத்தை செய்து அசத்தியுள்ளார். தமிழகத்தை காப்பாற்ற அரசாங்கம் செய்யாததை ஜி.வி.பிரகாஷ் செய்து அசத்தியுள்ளார்.
அதல பாதாளத்தில்...
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சியில் வளர்ந்து வரும் நிலையில், அரசு பள்ளிகளின் நிலைமையோ அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளின் தரம் மேம்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், கூலி வேலை செய்பவர்கள்கூட தங்கள் குழந்தைகளை கான்வென்டில்தான் படிக்க வைக்க நினைக்கிறார்கள். வீழ்ந்து கிடக்கும் அரசு பள்ளிகளை அரசாங்கம் தூக்கி நிறுத்த முடியாமல், அவைகளை இழுத்து மூடி வருகிறது.
மூடும் நிலையில் பள்ளிகள்
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு சிறப்பான காரியத்தை செய்ய முன்வந்துள்ளார். "ஏற்கனவே கல்வி வியாபாரமாக மாறி இருக்கிறது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். சமீப காலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர்.
|
பள்ளி தத்தெடுப்பு
நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன். எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள் இதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.
சிறிய உதவிதான்.. ஆனால்..
எவ்வளவோ பேர் காரியங்களை செயலில் காட்டாமல் வெற்றுக் கோஷங்களை எழுப்பி வரும் நிலையில், ஜிவி. பிரகாஷின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சிறிய உதவியே என்றாலும் இந்த நேரத்தில் செய்யப்படுவதால் அது உலகத்தைவிட பெரியதாகவே உள்ளது. சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!
என்றோ செய்திருக்கலாம்
அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச ஃபாரீன்ல இருந்து கோச்சிங் சொல்லி தர ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இங்கிலீஷ், ஸ்மார் வகுப்பு என்று பல இருந்தாலும், மூடப்பட்டு வரும் பள்ளிகளின் நிலைமையை அரசு உணர்ந்து பார்க்க வேண்டும். `அரசுப் பள்ளிகளின் நிலையை நம்மால் மாற்ற முடியும்!' - ஜி.வி. பிரகாஷ் இன்று செய்ய நினைத்ததை அரசு என்றோ செய்து முடித்திருக்க முடியும்.
நடவடிக்கை வேண்டும்
எல்கேஜி., யுகேஜி சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையிலா பள்ளிக்கல்வித்துறை உள்ளது? இப்படி தனிமனிதர்கள் அரசு பள்ளியை காப்பாற்ற சென்றுவிட்டால், அரசு எதற்கு? அதற்கு ஒரு துறை எதற்கு? இனியாகிலும் அரசு முன்வந்து மிச்சம்மீதி தத்தளித்து கொண்டிருக்கும் அரசு பள்ளியை மூடாமல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.