சோமனூர் பேருந்து நிலைய கட்டிட விபத்து... ககன்தீப்சிங் பேடி விசாரணை தொடங்கியது
கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து குறித்த விசாரணையை ககன்தீப் சிங் பேடி தொடங்கினார்.
கோவை அருகே சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20 வயது கல்லூரி மாணவி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். பேருந்து நிலைய கட்டிட விபத்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரித்த அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் இன்று முறைப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளார். காவல்துறையிடமிருந்து விபத்து குறித்த ஆவணங்களும், கட்டுமானம் குறித்த ஆவணங்களும் கோரியுள்ளார்.
மேலும் நாளை காலை விபத்து நடந்த சோமனூர் பஸ் நிலையத்தை ககன்தீப் சிங் பார்வையிடுகிறார். விபத்துக்கான காரணம் என்ன? யார் பொறுப்பு உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் விபத்து குறித்து முழுவதும் விசாரணை நடத்தி 2 மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.