புயல் தாக்கி 11 நாளாகியும் குடிநீர், மின்சாரம் இல்லை... கிராம மக்கள் சாலை மறியல்
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடிநீர், மின்சாரம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலின் கோர தாண்டவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொன்னவராயன்கோட்டை, புதூர், புலவன்காடு, திவ்வியக்காடு, ஆலடிக்குமுளை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதத்தை சந்தித்துள்ளன. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காமல் ஒரு வாரமாக மக்கள் தவித்து வந்தார்கள். நெல் விளையும் பூமியில் உணவுக்கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடியது அனைவரின் மனதையும் கணக்க செய்தது.
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக மின்சார சீரமைப்புக்கு ரூ 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கிற விவசாயிகள் இழப்பீடுக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களுக்கு போதிய உதவிகள் போய் சேராமல் தவித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம், திருச்சியில் ஆய்வு பணியை தொடங்கிய மத்தியக் குழுவினர், இன்று மூன்றாவது நாளாக நாகை, புதுச்சேரி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கஜா புயல் பாதித்து 11 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம், குடிநீர் வழங்கவில்லை என கூறி பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.