காந்தியே "இவர்" ஆட்சியைதான் விரும்பியிருப்பார்.. காந்தியின் செயலாளர் பரபரப்பு தகவல்கள்!
மதுரை: ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்பேன் என்று காந்தியின் செயலாளர் கல்யாணம் தெரிவித்துள்ளார்.
காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா காந்தி மியூசியத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது காந்தியின் செயலாளராக இருந்த கல்யாணம் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அவரது நினைவாக சிறப்பு தபால் தலை கண்காட்சியை திறந்து வைத்து கல்யாணம் பேசியதாவது: காந்தி ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும் என்பது விதி ஆகும். அப்போது பிரார்த்தனை நடக்கும்.
விரோதம்
அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரார்த்தனையாகவே அது இருக்கும். பிறகு 5 மணிக்கு தனக்கு வந்திருக்கும் கடிதங்களை வாசிக்க சொல்வார். அவற்றை கேட்டு மிக மென்மையாக அதற்குரிய பதில்களை சொல்வார். அதனை நான் எழுதுவேன். பின்னர் அதில் ஏதேனும் தவறிருந்தால் திருத்துவார். எந்த நேரத்திலும் கோபம் கொள்ள மாட்டார். யாரையும் அசட்டி பேசமாட்டார். அதை அவரது கொள்கைக்கு விரோதமாக நினைப்பார்.
மவுன விரதம்
பிறகு அவருக்காக காத்திருக்கும் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து உரையாடுவார். நம் நாட்டில் ஏழை மக்களின் நலன்களை சுற்றியே அவரது சிந்தனையும், பேச்சும், செயலும் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் மவுன விரதம் கடைபிடிப்பார்.
இந்தியா நன்றாக இருக்கும்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சிகள் நடந்தன. அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை, நாடு விடுதலை பெற்று ஐந்தரை மாதங்களில் நாம் இழந்தோம். அப்போது நம்மால் கொடுக்க முடியாத நல்லாட்சியை, இன்று வரை கொடுக்க முடியவில்லை. அந்த ஆங்கிலேயர் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும்.
பாராட்டு
நீங்கள் தவறு செய்தீர்கள் என்றால் உடனடியாக தண்டனை கிடைக்கும் எனும் நிலை வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது லஞ்சம் ஊழலுக்கு ஒருபோதும் இடமில்லை. நம்மைக் கொள்ளையடித்தார்கள் என்பது வேறு. ஆனால் அலுவலகத்தில் லஞ்சம்வாங்கும் பழக்கமெல்லாம் அவர்களிடம் இல்லை. வெள்ளையர் ஆட்சி நடைமுறை, நிர்வாகத் திறமை குறித்து காந்தியே பலமுறை பாராட்டியிருக்கிறார்.
மறந்துவிட்டார்கள்
காந்தியை சுத்தமாக மறந்துவிட்ட நாட்டில் காந்திக்கான தேவை எப்படி இருக்கும்? காந்தியை இப்போதும் மதிப்பவர்கள் வெள்ளையர்கள் மட்டுமே. தெய்வத்தைப் போன்று வணங்குகிறார்கள். 3 ஆயிரம் ஆண்டுகளானாலும் இன்னொரு காந்தி நமக்கு கிடைக்கமாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் நடைபெற்ற முதல் 2 தேர்தல்களில் காந்தியின் பெயரைச் சொல்லி வாக்குகள் வாங்கினார்கள். இப்போது அப்படி இல்லை என்ற போதே காந்தியை மறந்துவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்.
காந்தி விரும்புவாரா
இன்றைக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு வந்தால், அவர்களை மனப்பூர்வமாக வரவேற்பேன். காந்தி உயிரோடு இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். பாடுபட்டு உருவாக்கிய நம் தேசத்தை ஊழலிலும், ஏழ்மையிலும் விட்டுச்செல்லவா காந்தி விரும்பியிருப்பார்?
தலையெழுத்தே மாறியிருக்கும்
சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தான் முதல்முதலில் ஊழல் தொடங்கியது. இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகு ஒருவேளை நேதாஜி தலைமையில் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தால் தற்போதைய அவலங்களைப் போல் இருந்திருக்காது. இந்தியா விடுதலை பெறும்போது நேதாஜி தலைமையிலான ஆட்சி முறை 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும் என்று அவர் கூறினார்.