விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம் #vinayagar chaturthi
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஆண்டை போல 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதில் பெரும்பாலான இடங்களில் இன்று சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடை வீதிகளில் விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ மாலை, அருகம்புல், குடை, மா இலை, பூ, பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரை அடி முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவை,நெல்லை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினரும், பொதுநல சங்கத்தினரும் காலையிலேயே விநாயகர் சிலைகளை நிறுவி சுற்றி பந்தல் அமைத்தனர். பின்னர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிபெருக்கி மூலமாக விநாயகரின் பக்தி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. இதனால் இன்று சென்னை மாநகரில் திரும்பிய திசையெல்லாம் விழாக் கோலமாகவே காட்சி அளித்தது.
பல்வேறு விதமான வண்ண வண்ண விநாயகர்கள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. காவிரி பிரச்சினை தீர்வதற்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினை தீரவும் இந்த விநாயகருக்கு 21 புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த சிலைகள் அனைத்தும் பூஜை முடிந்த பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. வருகிற 10, 11ம்தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் அதிக எடையில் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைத்து வழிபடுவது சிறப்பு. வழக்கம்போல் இன்று திருச்சியில் உள்ள உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டை நிவேதனமாக படைக்கப்பட்டது.
பிள்ளையாருக்கு படைப்பதற்காக வெள்ளைத்துணியில் மெகா கொழுக்கட்டையை தூளி போல் கட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மலைக்கோயிலுக்கு சுமந்து சென்றனர். காலை முதல் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா தலைநகர் டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் விநாயகர் சதூர்த்தி விழா களை கட்டியுள்ளது. அங்குள்ள சுக்தேவ் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அங்கு வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. லால்பாக் பகுதியில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.