ஐ.ஜி தலைமையில் 2000 போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்புக்கு நடுவே முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம்
திருவாரூர்: இரு சமூகத்தினரிடையே மோதல்போக்கு நிலவிவரும் முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து அந்த நகரில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் விநாயகர் ஊர்வலங்கள் செல்வதை நடைமுறைப்படுத்தக்கோரியும், ஊர்வல பாதையை மாற்றியமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரியும் சட்டக்கல்லூரி மாணவர் சையது அபுதாஹிர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முத்துப்பேட்டையில் இன்று மாலை, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெருகிறது. இதற்கு தேசிய பாதுகாப்பு பேரவை தலைவர் பொன்னுசாமி தலைமை வகிக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
ஊர்வலத்தில் உப்பூர், தில்லை விளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. முன்னதாக மதியம் 2 மணிக்கு துவங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல் வழியாக மாலை 6 மணிக்கு செம்படவன் காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் கடந்த ஒரு வாரமாக திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன். திருவாரூர் கலெக்டர் மதிவாணன் ஆகியோர் முத்துப்பேட்டையில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகிறன்றனர்.
மேலும் ஊர்வல பாதையை முழுவதும் கண்காணிப்பு சேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் போது அதனை படம் பிடிக்க 100க்கும் மேற்ப்பட்ட வீடியோக் கேமராக்கள் பயன்படுத்த உள்ளனர். ஊர்வலம் செல்லும் பாதையில் ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. சாலை இருபுரங்களிலும் தடுப்பு வேலிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பேரிக்காடு அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளனர். கலவரத்தைத் தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியன் தலைமையில் தஞ்சை டி.ஐ.ஜி, திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன், தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபினவ் மற்றும் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் எஸ்.பிக்கள் மற்றும் திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 2000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, தாசில்தார்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
முத்துப்பேட்டை சுற்று புறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் தீவர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போன்று கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.