இந்து முன்னணி சார்பில் 60 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்: ராம.கோபாலன் தகவல்
சென்னை: இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் 60 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து ராமகோபாலன் கூறியதாவது: கோயில்களை இந்துக்களின் உயிர்நாடி என்று கூறலாம். தமிழ்நாட்டில் 46 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் தினமும் 6 கால பூஜை, அன்னதானம் வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆண்டுதோறும் ஒரு மைய கருத்தை வலியுறுத்தி விழாக்களை நடத்துகிறோம். இந்த ஆண்டு, ‘மதம் மாறுவது அவமானம், தாய் மதம் திரும்புவது தன்மானம்' என்ற மைய கருத்தை வலியுறுத்த உள்ளோம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 60 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5,501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. மொத்தம் 350 இடங்களில் ஊர்வலங்கள் நடக்கிறது.
புதிய காலனிகள், புதிய குடியிருப்புகள் உருவாகி வரும்போது, ஏன் புதிய இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது?. எல்லா இடங்களில் ஊர்வலம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், சில இடங்கள் வழியாக செல்ல உரிமை இல்லை என்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்காவிட்டால், அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும்.
சென்னையில் செப்டம்பர் 7ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. மொத்தம் 3 இடங்களில் இருந்து ஊர்வலம் தொடங்குகிறது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை பகுதியில் முத்துசாமி பாலம் ஆகிய இடங்களில் இருந்து விநாயகர் சிலைகளின் ஊர்வலம் தொடங்கும். இவ்வாறு ராமகோபாலன் தெரிவித்தார்.